பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
|பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பெஷாவர்:
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது.
ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அந்த பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணம் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.