கன்னியாகுமரி
தக்கலை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
|தக்கலை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை அருகே உள்ள குமாரபுரம், படப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரோஸ்மேரி. இவருடைய கணவர் கமலேசன் மற்றும் ஒரு மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதனால், ரோஸ்மேரி தனது இளைய மகன் வினுராஜூடன் (வயது 35) வசித்து வந்தார். தொழிலாளியான வினுராஜூக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சரியாக வேலைக்கு செல்லாமலும், வேலை செய்து கிடைக்கும் பணத்தை நண்பர்களோடு சேர்ந்து மதுகுடித்து ஊதாரித்தனமாக சுற்றி வந்தார்.
மேலும், வினுராஜூக்கு யாரும் பெண் கொடுக்காததால் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணம் ஆகாததால் கடந்த சில நாட்களாக வினுராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்தவரை தாயார் சாப்பிட அழைத்துள்ளார். அதற்கு சாப்பாடு வேண்டாம் என கூறி தூங்கச் சென்றார். நேற்று அதிகாலையில் வினுராஜ் விஷம் குடித்து விட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரோஸ்மேரி, உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வினுராஜ் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கொற்றிக்கோடு போலீசார் விரைந்து வந்து வினுராஜின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.