< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
12 Sep 2023 6:50 PM GMT

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 23). இவர் புதிய பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முனீஸ்வரன் தனது ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்திவிட்டு, கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனை நோட்டமிட்ட ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை நைசாக சிறிது தூரத்திற்கு நகர்த்திச்சென்று பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். இதையறிந்த முனீஸ்வரன் உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஜாமீனில் வெளியே வந்தவர்

அப்போது அந்தவழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முனீஸ்வரனின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து, அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த பழனியின் மகன் பாலமுருகன் (30) என்பதும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கில் கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும், கடந்த 11-ந்தேதி ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன் தற்போது மோட்டார் சைக்கிளை திருடி சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்