< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு; கொலையா? கணவாிடம் போலீசார் விசாரணை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு; கொலையா? கணவாிடம் போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
19 Oct 2022 7:58 PM GMT

நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (வயது 40). கார் டிரைவர். இவருடைய மனைவி ஈஸ்வரி (35). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சுடலைக்கண்ணு மதுரையில் கார் டிரைவராக உள்ளார்.

தனியாக வீடு எடுத்து தங்கினர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ஊருக்கு சுடலைக்கண்ணு வந்தார். பின்னர் கணவன்-மனைவி நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார்கள்.

கடந்த 16-ந் தேதி இரவில் சுடலைக்கண்ணு தனது மனைவி ஈஸ்வரியை அங்குள்ள நம்பியாற்றின் பகுதிக்கு அழைத்து சென்றார். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை.

ஆற்றில் பிணமாக மிதந்தார்

நேற்று காலையில் நம்பியாற்றில் ஒரு பெண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, நாங்குநேரி போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தண்ணீரில் இறந்து கிடந்த பெண் ஈஸ்வரி என்பது தெரியவந்தது. அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருந்தது. தொடர்ந்து ஈஸ்வரி உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிேசாதனை அறிக்கை முடிவு வந்த பின்னரே ஈஸ்வரி எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சுடலைக்கண்ணு தலைமறைவாக இருந்ததால் அவரை போலீசார் தேடிவந்தனர்.

கணவரிடம் விசாரணை

இந்த நிலையில் சுடலைக்கண்ணு நேற்று போலீசாரிடம் சிக்கினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து சுடலைக்கண்ணுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்