< Back
மாநில செய்திகள்
இளம்பெண் மர்ம சாவு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

இளம்பெண் மர்ம சாவு

தினத்தந்தி
|
17 Aug 2023 9:00 PM GMT

பொள்ளாச்சி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வயிற்று வலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மனைவி ராதா(வயது 30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா(60) வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராதா வயிற்று வலியால் துடித்தார். உடனே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்கேன் எடுக்குமாறு அவரிடம் கூறினார்கள். ஆனால் ஸ்கேன் எடுக்காமல் மருந்து, மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.

மயங்கி விழுந்து சாவு

இதற்கிடையில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென்று ராதா மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ராதா இறந்து விட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

சந்தேக மரணம்

பின்னர் போலீசார் கூறியதாவது:-

கடந்த 14-ந் தேதி மாசாணியம்மன் கோவிலுக்கு ஊசி, பாசி விற்பனை செய்வதற்கு ராதாவும், வசந்தாவும் சென்றனர். இரவு 7 மணிக்கு வீட்டுக்கு வரும் வழியில் அய்யாமடை டாஸ்மாக் கடை அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது வசந்தா காலால் ராதாவின் வயிற்று பகுதியில் மிதித்தார். இதனால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு முழு விவரம் தெரியவரும். தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்