< Back
மாநில செய்திகள்
இளம்பெண் கொடூரக்கொலை-சாக்குமூட்டையில் கட்டி உடல் கிணற்றில் வீச்சு
தென்காசி
மாநில செய்திகள்

இளம்பெண் கொடூரக்கொலை-சாக்குமூட்டையில் கட்டி உடல் கிணற்றில் வீச்சு

தினத்தந்தி
|
10 Aug 2023 7:00 PM GMT

கடையநல்லூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தரைமட்ட கிணறு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அங்குள்ள சேர்ந்தமரம் சாலையில் கண்டமான்குளத்தின் கரை அருகில் பயன்பாடு இல்லாத தரைமட்ட கிணறு உள்ளது.

அந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விவசாயி ஒருவர் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார். அந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கிணற்றுக்குள் பார்த்தார். தண்ணீரில் ஒரு சாக்குமூட்டை கட்டப்பட்ட நிலையில் மிதந்தது.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து அவர் உடனடியாக தலையாரி ஆரோக்கியசாமி, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று காலை சென்றனர். மேலும், கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் அங்கு வந்தனர்.

சாக்குமூட்டையில் பிணம்

தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார்கள். தண்ணீரில் மிதந்த சாக்குமூட்டையில் கால்கள் வெளியே தெரிந்தது. உடனடியாக சாக்குமூட்டையை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

அதை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது, அதில் இளம்பெண் உடல் அழுகிய நிலையில் இருந்தார். பிணத்தின் வலது கையில் எம்.வி. என்று ஆங்கிலத்திலும், காதலை குறிக்கும் வகையில் 'ஹார்டின்' படமும் பச்சைகுத்தப்பட்டு இருந்தது. பின்னர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கொன்று வீச்சு

பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ஒரு சாக்குமூட்டையை கிணற்றில் போட்டுச் சென்றுள்ளனர். எனவே, அவர்கள் தான் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் தென்காசி மாவட்டத்தில் மாயமான இளம்பெண்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா?, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

மேலும், இந்த கொடூரக்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடையநல்லூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்