< Back
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
11 May 2024 9:48 AM GMT

துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 8.94 லட்சம் மாணவ-மாணவிகளில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த துணை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.மீண்டும் தேர்வு எழுத அவர்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜூலை மாத துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தனித்தேர்வர்களும் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வருகை புரியாதவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர 16-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கட்டணம் ரூ.125 பணமாக செலுத்தி பெயர்களை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.10-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜூலை 2-ந் தேதி தமிழ், 3-ந்தேதி ஆங்கிலம், 4-ந்தேதி கணிதம், 5-ந்தேதி அறிவியல் 6-ந்தேதி விருப்ப மொழிப்பாடம், 8-ந்தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெறும்.

மேற்கண்ட தகவலை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்