< Back
மாநில செய்திகள்
கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா

தினத்தந்தி
|
4 Oct 2023 7:34 PM GMT

சின்னாளப்பட்டியில் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டார்.

சின்னாளப்பட்டியில் கூட்டுறவு கட்டிட கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு நேற்று ஆத்தூர் அருகே பாறைப்பட்டி ஆர்.வி.எஸ்.நகரை சேர்ந்த முத்துக்குமார் என்ற கூலித்தொழிலாளி, தனது குடும்பத்துடன் வந்தார். அப்போது அவர் கடன் சங்க அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்ட முத்துக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் வீடு கட்டுவதற்காக கூட்டுறவு கடன் சங்கத்தில் தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை முழுமையாக செலுத்திய நிலையில், வீட்டு பத்திரத்தை திரும்ப கொடுக்காமல் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதுகுறித்து கேட்க வந்த எங்களை அலுவலக ஊழியர்கள் கண்டுகொள்ளாமல், அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அதனால் தர்ணாவில் ஈடுபட்டதாக முத்துக்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். பின்னர் இதுதொடர்பாக அவர் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்