< Back
மாநில செய்திகள்
கருக்கலைப்பு செய்த பெண் சாவு
திருச்சி
மாநில செய்திகள்

கருக்கலைப்பு செய்த பெண் சாவு

தினத்தந்தி
|
30 July 2023 9:01 PM GMT

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்தார்.

துறையூர்:

2 குழந்தைகளின் தாய்

தொட்டியத்தை அடுத்த எம்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பிரியா(வயது 31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஜோதிடம் பார்த்தபோது, மீண்டும் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் பிரியா குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து பிரியா குடும்பத்தினர், துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டியில் மருந்து கடை வைத்து நடத்தி வரும் சித்ரா என்பவரை அணுகியுள்ளனர். அவர் பிரியாவுக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரியா அனுமதிக்கப்பட்டார்.

சாவு

பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்