
பெரம்பலூர்
மொபட் மீது கார் மோதியதில் பெண் பலி

மொபட் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
ஜாதகம் பார்க்க...
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பரவாய் காலனி தெருவை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி கொளஞ்சி(வயது 43). இவர் நேற்று அதிகாலை தனது உறவினரான குன்னம் அண்ணா நகரை சேர்ந்த ரவிச்சந்திரன்(41) என்பவருடன் மொபட்டில் வல்லாபுரத்திற்கு ஜாதகம் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.
தண்ணீர்பந்தல் அருகே சென்றபோது அவர்கள் ஜாதக புத்தகத்தை எடுத்து வைக்க மறந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜாதக புத்தகத்தை எடுத்து வருவதற்காக வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை ரவிச்சந்திரன் ஓட்ட, பின்னால் கொளஞ்சி அமர்ந்திருந்தார்.
பெண் சாவு
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு சாலையை தாண்டி சென்றபோது, அதே சாலையில் பின்னால் வந்த கார், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கொளஞ்சிக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.