< Back
மாநில செய்திகள்
திருமணமான 1½ வருடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

திருமணமான 1½ வருடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை

தினத்தந்தி
|
15 Oct 2022 8:36 AM GMT

ஆவடி அருகே திருமணமான 1½ வருடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அடுத்த பொத்தூர் செல்வ கணபதி நகரை சேர்ந்தவர் கிஷோர் (வயது 34). குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜா என்ற பவானி (24). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாதத்தில் கனிஷ்கா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தை பெற்றெடுப்பதற்காக செங்குன்றம் அடுத்த கண்டிகை, திடீர் நகர், பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு ரோஜா சென்றார். அதன் பிறகு கணவர் வீட்டிற்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கிஷோர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மாமியார் அம்சவேணி (55) இருந்துள்ளார். அப்போது அம்சவேணி ரோஜாவிடம் வீட்டில் ஒழுங்காக வேலை செய்யுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து ரோஜா அவரது பெற்றோருக்கு போன் செய்து என்னை வேலை செய்ய சொல்கிறார்கள் என்று கூறி அழுததாக தெரிகிறது.

இதையடுத்து வீட்டின் படுக்கையறைக்கு சென்ற ரோஜா உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவரது மாமியார் அம்சவேணி மகன் கிஷோருக்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக கிஷோர் வங்கியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் கயிற்றால் ரோஜா தூக்கில் பிணமாக தூங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு ரோஜாவின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் கொடுத்த நிலையில், நேற்று காலை ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் வந்து புகார் கொடுத்தனர். இதையடுத்து ஆவடி டேங்க் பேக்கரி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்