< Back
மாநில செய்திகள்
குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தினத்தந்தி
|
5 Oct 2023 6:45 PM GMT

ஆதினங்குடி-கணபதிபுரம் இடையே உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திட்டச்சேரி:

ஆதினங்குடி-கணபதிபுரம் இடையே உள்ள குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அன்றாட தேவைகளுக்கு...

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதினங்குடியில் இருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

இந்த சாலையை ஆதினங்குடி, பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாடம் தேவைகளுக்காக நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

சேதமடைந்த சாலை

மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர். மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்வதற்கும் இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கீழே விழுந்து காயமடைகின்றனர்

இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் கூட தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

சீரமைக்க கோரிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மேற்கண்ட குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

மேலும் செய்திகள்