< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை - கணவன் வெறிச்செயல்...!
மாநில செய்திகள்

கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மனைவி கழுத்தை அறுத்துக்கொலை - கணவன் வெறிச்செயல்...!

தினத்தந்தி
|
17 Aug 2022 4:32 AM GMT

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த அப்பெண்ணை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் அருகே எலவம்பட்டி ஜீவானந்தம் நகரை சேர்ந்தவரை சங்கர். இவரது மகள் அருள்மொழி (வயது 28). இவருக்கும் ஆந்திர மாநிலம் குப்பம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (32) என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேல்முருகன் குப்பத்தில் பாணிபுரி வியாபாரம் பார்த்து வருகிறார். வேல்முருகனுக்கும் அவரது மனைவி அருள்மொழிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் அருள்மொழி, சொரக்காயல்நத்தம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த கணவர் வேல்முருகன் மனைவியை கண்டித்து கள்ளக்காதலை கைவிடக்கூறியுள்ளார். ஆனால் அருள்மொழி இதனை மறுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் தலைமறைவானார்.

இதுகுறித்து கணவர் வேல்முருகன் குப்பம் போலீசில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாண்டிச்சேரியில் பதுங்கி இருந்த அருள்மொழியையும், கள்ளக்காதலனையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அருள்மொழிக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து அருள்மொழி கடந்த 3 நாட்களாக தனது பெற்றோர் வீட்டில் இருந்தார். அப்போது கணவர் வேல்முருகன் மனைவியின் வீட்டிற்கு வந்து 2 நாளாக தங்கி உள்ளார். நேற்று அருள்மொழியின் பெற்றோர்கள் வேலைக்கு சென்றனர். வீட்டில் அருள்மொழி, கணவர் வேல்முருகன் மட்டும் இருந்தனர்.

அப்போது அவர்களுக்கு மீண்டும் தகராறு ஏற்படவே வேல்முருகன் தான் வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அருள்மொழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான வேல்முருகன் குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அதைத்தொடர்ந்து குப்பம் போலீசார் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கந்திலி போலீசார் குப்பம் சென்று வேல்முருகனை கைது செய்து அழைத்து வந்தனர்.

இந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்