< Back
மாநில செய்திகள்
கணவரை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற மனைவி - தென்காசியில் பரபரப்பு
மாநில செய்திகள்

கணவரை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற மனைவி - தென்காசியில் பரபரப்பு

தினத்தந்தி
|
28 Jan 2024 9:53 AM GMT

குடும்ப தகராறில் கணவரை மனைவி மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பாம்புகோவில்சந்தை வேட்ராம்பட்டி- சிங்கிலிபட்டி சாலையில் வசித்தவர் ராஜூ (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி கலைச்செல்வி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.

இதனால் ராஜூ-கலைச்செல்வி தம்பதியர் தங்களது வீட்டில் தனியாக வசித்தனர். ராஜூவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கலைச்செல்விக்கு சற்று மனநலம் பாதித்ததால் அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவில் ராஜூ மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். இதனால் அவருக்கும், மனைவி கலைச்செல்விக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வி மண்வெட்டியால் ராஜூவை வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கம்பாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ராஜூ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நேற்று அதிகாலையில் கலைச்செல்வி அக்கம்பக்கத்தினரிடம் சென்று, தனது கணவர் தகராறு செய்ததால் அவரை மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்ததாக கூறினார். உடனே உறவினர் ஒருவர் கலைச்செல்வியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு ராஜூ ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ராஜூவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை போலீசார் கைது செய்தனர்.

கடையநல்லூர் அருகே கணவரை மனைவியே மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்