< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில் திராவகம் குடித்து மனைவி தற்கொலை: அதிர்ச்சியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த கணவர்
மாநில செய்திகள்

குடும்ப தகராறில் திராவகம் குடித்து மனைவி தற்கொலை: அதிர்ச்சியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த கணவர்

தினத்தந்தி
|
22 Feb 2024 10:25 PM GMT

குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கணபதி நகரில் வசித்து வந்தவர் சந்திரசேகர் (வயது 58). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி இந்துமதி (53). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். சந்திரசேகருக்கும், இந்துமதிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியுடன் கோபித்துக் கொண்டு சந்திரசேகர் வெளியூர் சென்றார். இதற்கிடையில் மனவருத்தத்தில் இருந்த இந்துமதி, கடந்த 20-ந்தேதி இரவு கழிப்பறையில் இருந்த திராவகத்தை(ஆசிட்) குடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இந்துமதியை சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், இந்துமதி பரிதாபமாக இறந்தார். இதை அறியாத சந்திரசேகர் வெளியூரில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அவர்கள் இந்துமதி திராவகம் குடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார், சந்திர சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்