< Back
மாநில செய்திகள்
நெல்லையில் பரவலாக மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் பரவலாக மழை

தினத்தந்தி
|
15 July 2022 9:34 PM GMT

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென் மேற்கு பருவ காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக பரவலாக மழையும் பெய்து வருகிறது. நேற்று நெல்லை மாநகரில் சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அம்பை, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம், ராதாபுரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 66.65 அடியாக உள்ளது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,837 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு சற்று அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 805 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 81.59 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளான மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1,040 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு 275 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 74.65 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நீர்மட்டம் 63 அடியாக இருந்தது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து 76.50 அடியை எட்டியது. இந்த அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 77 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணைக்கும் நீர்வரத்து 47 கன அடியாக அதிகரித்து உள்ளது. இந்த அணை நீர்மட்டம் 37.73 அடியாக உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 68 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வழிந்தோடுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 70 அடியில் இருந்து 78 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 143 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 5 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டு உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பாபநாசம் -11, சேர்வலாறு -18, மணிமுத்தாறு -3, கொடுமுடியாறு -10, களக்காடு -1, ராதாபுரம் -2, கடனாநதி -12, ராமநதி -17, கருப்பாநதி -40, குண்டாறு -31, அடவிநயினார் -16, ஆய்க்குடி -6, செங்கோட்டை -13, தென்காசி -10, சிவகிரி -1.


மேலும் செய்திகள்