< Back
மாநில செய்திகள்
குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது?

தினத்தந்தி
|
24 Aug 2022 4:38 PM GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எப்போது என எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உள்ளது.

குடிநீர் பிரச்சினை

தமிழகத்தில் வறண்ட மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக குடிதண்ணீர் தட்டுப்பாடு தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது. மாவட்டத்தின் எல்லை பகுதியான கன்னிராஜபுரம் பகுதியில் இருந்து மாவட்டத்தின் முடிவு பகுதியான தொண்டி வரையிலான மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பாலான ஊர்களில் குடிநீருக்காக படும் கஷ்டத்தை சொல்லி முடியாது.

அந்த அளவுக்கு குடிநீருக்காக இரவும்-பகலும் தள்ளுவண்டியில் குடங்களுடன் பல கிலோமீட்டர் அலைந்து எடுத்து வரும் நிலை தற்போதும் இருந்து வருகிறது.

எதிர்பார்ப்பு

குறிப்பாக சாயல்குடி அருகே பூபாண்டியபுரம், மலட்டாறு, சிக்கல், கடுகுசந்தை, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், இதம்பாடல், காவனூர், குளத்தூர், முதுகுளத்தூர், தேரிருவேலி, நரிப்பையூர் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் மக்கள் தள்ளுவண்டியிலும், இருசக்கர வாகனத்திலும், சைக்கிளிலும் குடங்களுடன் குடிதண்ணீருக்காக அலைந்து கஷ்டப்பட்டு எடுத்து வருகின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தற்போது பயன்பாட்டில் இருந்து வந்தாலும் இதன் மூலம் முழுமையாக மாவட்டத்தில் குடிதண்ணீர் பிரச்சினை தீரவில்லை. குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எதிர்பார்த்து பெண்கள் எதிர்பார்ப்போடும், ஏக்கத்தோடும் காத்திருந்து வருகின்றனர்.

தீர்வு காணப்படுமா?

மத்திய, மாநில அரசுகள் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பல கோடி ஒதுக்கி வரும் நிலையிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்தினால் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும்.

மாவட்டத்தில் முக்கிய பிரச்சினையாக கருதப்படும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் பட்சத்தில் வறண்ட மாவட்டம் என்ற பெயரும் மறைந்து செழிப்பான மாவட்டம் என்ற பெயரும் வந்து விடும் என்பதே உண்மை.

மேலும் செய்திகள்