< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் கதி என்ன?
கரூர்
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவர் கதி என்ன?

தினத்தந்தி
|
10 July 2022 6:31 PM GMT

தோட்டக்குறிச்சி பகுதியில் காவிரி ஆற்றில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவரின் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மாணவர்

நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 45). இவரது மகன் நவீன்காந்த். இவர் செங்கல்பட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றார். இந்தநிலையில் ஆனந்தராஜ், நவீன்காந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் நேற்று காலை ஊரில் இருந்து புறப்பட்டு கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் உள்ள மலையம்மன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வந்தனர்.

காலை 10.30 மணி அளவில் ஆனந்தராஜ் தனது குடும்பத்தினருடன் தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நவீன்காந்த், உறவினர் மகன்கள் பூஜேஸ் (13), நிஷாந்த் (9) ஆகியோர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அருகில் குளித்து கொண்டிருந்தவர்கள் பூஜேஸ், நிஷாந்த் ஆகியோரை காப்பாற்றி விட்டனர். நவீன்காந்த் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

தேடும் பணி தீவிரம்

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். பின்னர் காவிரி ஆற்றில் இறங்கி நவீன் காந்த்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவரது கதி என்னானது என்று தெரியவில்லை.

மேலும் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்