காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
|காஞ்சீபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 270 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.பிறகு மாற்றுத்திறனாளி எஸ்.வினோத் என்பவர் மளிகை கடை வைக்க கூட்டுறவுத்துறை சார்பில், வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
நலதிட்ட உதவிகள்
மேலும் உத்திரமேரூர் வட்டம், சிறுபினாயூர், கிளக்காடி, பேரணக்காவூர், அகரம் துளி, நாஞ்சிபுரம் மற்றும் காரணை ஆகிய கிராமத்தை சேர்ந்த 13 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். மேலும் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற லதா, சங்கீதா ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சீபுரம் மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.