மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8,454 கன அடியாக குறைவு
|இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.09 அடியாக உள்ளது.
சேலம்,
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்தது.
இதையடுத்து அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்ததால், நடப்பாண்டு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாகவே கடந்த 24-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்படி மேட்டூர் அணையில் நேற்று 8,539 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 8,454 கன அடியாக சரிந்துள்ளது.
அதே சமயம் அணையின் நீர்மட்டம் 118.09 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் தற்போது 90.19 டி.எம்.சி அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.