< Back
மாநில செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 4:45 AM GMT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழக மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஒகேனக்கல், மேட்டூர் இடையிலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்கிறது. இந்த மழை நீரும் மேட்டூர் அணைக்கு வருகிறது.

இதனால் நேற்று காலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது. பின்னர் மாலை நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து இன்று காலையும் அணைக்கு விநாடிக்கு 26 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடி வீதமும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி வீதமும் கால்வாயில் 750 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருவி, காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்