< Back
மாநில செய்திகள்
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக்குழு கூட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
27 Sep 2023 7:20 PM GMT

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக்குழு கூட்டம் துரை ரவிக்குமார் எம்.பி. தலைமையில் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் துரை ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.பழனி, மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு இணைத்தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறிவுரை

கூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராம திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் தனித்தனியாக துரை ரவிக்குமார் எம்.பி. விரிவாக கேட்டறிந்தார்.

மேலும் அவர் கூறுகையில், வளர்ச்சி திட்டப்பணிகள் முடிவுற்றாலும், தொடர்ந்து கண்காணித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செயல்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தன்மை குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்துகொண்டு அதனை நிறைவேற்றி கொடுத்திட வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்