< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில்களில் வைகாசி தேரோட்டம்

தினத்தந்தி
|
5 Jun 2023 6:11 PM GMT

குறிச்சிக்குளம், வயலோகம் முத்துமாரியம்மன் கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

ஆவுடையார்கோவில் குறிச்சிக்குளத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா மே மாதம் 28-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் முத்துமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். வழிநெடுகிலும் அம்மனுக்கு கஞ்சி காய்ச்சி படைத்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் பால்குடம், வேல்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.

வயலோகம் அம்மன் கோவில்

அன்னவாசல் அருகே வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 28-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் மண்டகபடிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், கரும்பு தொட்டில், அலகு குத்தி கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

அசைந்தாடி வந்த தேர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். இதையடுத்து மேள, தாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் கூட்டத்தில் அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடிநின்று தேங்காய், பூ, பழம் வைத்து முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது.

இதில் அன்னவாசல், வயலோகம், இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்