< Back
மாநில செய்திகள்
மத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
15 Dec 2022 8:04 AM GMT

மத்திய அரசு பணியிடங்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குவதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் இளநிலை செயலக உதவியாளர், கீழ்பிரிவு எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பல காலிபணி இடங்களுக்கு மத்திய அரசு பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 முதல் 27 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்தியா முழுவதும் மொத்தம் 4,500 பணியிடங்கள் உள்ளது.

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 4-01-2023 ஆகும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியில் பயன்படுத்திக் கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற 19-ந் தேதி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போட்டி தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்