< Back
மாநில செய்திகள்
நீட் உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

'நீட்' உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்

தினத்தந்தி
|
26 Nov 2022 6:15 PM GMT

‘நீட்' உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.

போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் வழிகாட்டுதலின்பேரில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். 'நீட்' பயிற்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், அறிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தில் இருந்து 274 மாணவர்களும், 153 மாணவிகளும் என 427 பேர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் குழு, குழுவாக பிரிக்கப்பட்டு 'நீட்' தேர்வுக்கு அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பிற போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

41 கட்டங்களாக...

மேலும் இவர்களுக்கு 41 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அளவில் பள்ளிகளில் வைத்து 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 5 பேருக்கு அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்