< Back
மாநில செய்திகள்
சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்: மரக்கிளை முறிந்து விழுந்து சென்னை மாணவி பலி
சென்னை
மாநில செய்திகள்

சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்: மரக்கிளை முறிந்து விழுந்து சென்னை மாணவி பலி

தினத்தந்தி
|
15 May 2023 12:53 AM GMT

சுற்றுலா சென்ற இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து சென்னை மாணவி பலியானார்.

சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரை சேர்ந்தவர் நிக்ஸன் (வயது 47). கார் டிரைவர். அவருடைய மனைவி கிருஷ்ணமாலா. இந்த தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு காரில் நேற்று சுற்றுலா சென்றார். அங்கு அருவியை சுற்றியுள்ள இடங்களை கண்டு களித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர்.

இதைத்தொடர்ந்து பெமினா உள்பட அனைவரும் அருவியில் இருந்து, கார் நின்ற இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். வென்னியாறு பாலம் அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மரத்தில் இருந்த பெரிய கிளை ஒன்று, திடீரென முறிந்து பெமினாவின் தலையில் விழுந்தது.

இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட சம்பவ இடத்திலேயே பெமினா பரிதாபமாக இறந்தார். தங்களுடன் நடந்து வந்த பெமினா தங்களது கண்எதிரே, கண்இமைக்கும் நேரத்தில் மரக்கிளை விழுந்து உயிரை விட்ட சம்பவம் அவரது பெற்றோா் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி பெமினாவின் பெற்றோர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்துக்கு வந்தனர். பின்னர் சென்னை கும்மிடிபூண்டியில் உள்ள அகதிகள் முகாமில் குடியிருந்த அவர்கள், தங்களது பிள்ளைகளின் படிப்பு மற்றும் வேலையின் காரணமாக சென்னை நீலாங்கரையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா சென்ற இடத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்