< Back
மாநில செய்திகள்
தெற்கு மாசி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி
மதுரை
மாநில செய்திகள்

தெற்கு மாசி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி

தினத்தந்தி
|
16 Oct 2022 7:51 PM GMT

தெற்கு மாசி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


தெற்கு மாசி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

நடைபாதை

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் மதுரை தெற்கு மாசி வீதியில் ஒரு ஜவுளி நிறுவனம் வீதியையே கபளிகரம் செய்ய தொடங்கி உள்ளது. நடைபாதை முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் நடைபாதை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சாலைக்கு வியாபாரம் செய்ய வந்தனர்.

அங்கும் வாகனங்களை நிறுத்தி வைப்பதால், வேறு வழி இன்றி சாலையின் நடுவிலே நின்று வியாபாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள ஒரு வியாபாரி கூறியதாவது:- ஒரு ஜவுளி நிறுவனம் அருகில் உள்ள சிறிய சிறிய கடைக்காரர்களை வியாபாரம் செய்யவிடாமல், வாகனங்களை நிறுத்தியும், நடைபாதை முழுவதும் அடைத்தும் உள்ளனர். இதனால் சிறிய கடைக்கு வாடிக்கையாளர்கள் வர வழியின்றி இருப்பதால், வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக 4 மாடி கட்டிடத்தையும் திறந்து வைத்து உள்ளனர். அங்கும் பார்க்கிங் எந்த வசதியும், அதற்கான இடம் இல்லை. இதை கேட்க எந்த அதிகாரியும் வருவது இல்லை. இங்கு பலமுறை வருமானவரித்துறை சோதனை நடைபெற்று உள்ளது. இருந்தபோதிலும் தடையின்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஆதரவு கரம்

இது போன்ற சூழலில் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளாக இருந்தால் இந்தநேரம் கடையை மூடி சீல் வைத்திருப்பார்கள். பெரிய நிறுவனம் என்பதால் யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்கு அரசின் அனைத்து துறைகளில் இருந்தும் ஆதரவு கரம் நீட்டுவதால், இவர்களது ஆக்கிரமிப்பு எல்லை கூடிக்கொண்டே போகிறது என்று தெரிவித்தார்.

தெற்கு மாசி வீதி நடைபாதை ஆக்கிரமித்து தற்போது தெருவையே ஆக்கிரமித்து கடுமையான போக்கு வரத்து நெருக்கடியில் சிக்க வைத்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீபாவளிக்கு சாலையோர வியாபாரிகளும், பொதுமக்களும் தெற்கு மாசி வீதியை முழுமையாக பயன்படுத்தி தீபாவளி பொருட்களை வாங்கி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் சிறு வியாபாரிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்