< Back
மாநில செய்திகள்
ஞாயிறு விடுமுறையையொட்டி சூரிய உதயத்தை பார்க்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஞாயிறு விடுமுறையையொட்டி சூரிய உதயத்தை பார்க்க ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
22 Jan 2023 9:29 PM GMT

ஞாயிறு விடுமுறையையொட்டி சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

கன்னியாகுமரி:

ஞாயிறு விடுமுறையையொட்டி சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

சுற்றுலா பயணிகள்

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இந்தநிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரிய உதயமான காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர். சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கூட்டம் அலைமோதியது

அதனைத்தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கண்டு ரசிக்க படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பாா்த்து ரசித்தனர்.

நேற்று ஒரே நாளில் 7ஆயிரத்து 700 பேர் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு உள்ளனர். தற்போது திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெறாததால் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி களை கட்டியது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்