< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தினத்தந்தி
|
4 Jun 2023 6:45 PM GMT

கோடைவிடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி:

கோடைவிடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் வழக்கமான நாட்களை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அதேபோல் கோடைவிடுமுறை சீசன் காலமான தற்போது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தநிலையில் விடுமுறையின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து உற்சாகமாக பொழுது போக்கியதை காணமுடிந்தது.

அதிகாலையிலேயே முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர்.

படகு சேவை நிறுத்தம்

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். வழக்கமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்படும்.

நேற்று காலையில் திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்வத்துடன் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

பின்னர் 10 மணிக்கு கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததை தொடர்ந்து படகு சேவை தொடங்கியது. அதில் சுற்றுலா பயணிகள் படகில் உற்சாகத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

தீவிர கண்காணிப்பு

இதேபோல் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்