< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
29 Jan 2023 6:45 PM GMT

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி:

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு ஆர்வத்துடன் சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த னர். அதைதொடர்ந்து உற்சாகத்துடன் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வை ரசித்து விட்டு திரும்பினர்.

களை கட்டியது

இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா, பழத்தோட்டம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரி களை கட்டியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

திற்பரப்பு அருவி

இதேபோல் குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவ்வாறு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர், அருவியின் மேல் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

இதேபோல் மாத்தூர் தோட்டிபாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரிகோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்