< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
4 Jun 2022 2:46 PM GMT

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

அதன்படி கோடை விடுமுறையான தற்போது அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் பள்ளிகளுக்கான விடுமுறை இன்னும் நீடிப்பதால் அங்கு குடும்பத்துடன் மக்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருவதை காணமுடிகிறது. இந்தநிலையில் சனிக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.

படகு சவாரி

அவர்கள் அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரிய உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு படகில் சவாரி செய்து பார்வையிட்டனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியது. மாலை நேரத்தில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் இதமான காற்றை அனுபவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்