< Back
மாநில செய்திகள்
அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளும் மீட்பு
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளும் மீட்பு

தினத்தந்தி
|
16 Aug 2022 9:18 AM GMT

சென்னை, அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர். இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ,சூர்யா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கி கொள்ளை தொடர்பாக கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் இதுவரை 28 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த தங்க நகைகளையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். ஏற்கனவே 28 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகையில், 700 கிராம் மட்டும் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்