< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்களுக்கு டோக்கன் வினியோகம்
அரியலூர்
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்ட சிறப்பு முகாம்களுக்கு டோக்கன் வினியோகம்

தினத்தந்தி
|
2 Aug 2023 6:30 PM GMT

கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய 2-ம் கட்டமாக நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களுக்கான டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

2-ம் கட்ட சிறப்பு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற தகுதியான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் ஜெயங்கொண்டம் தாலுகாவில் 162 ரேஷன் கடை பகுதிகளிலும், ஆண்டிமடம் தாலுகாவில் 67 ரேஷன் கடை பகுதிகளிலும், பேரூராட்சிகள், தாலுகாக்களில் இதுவரை சிறப்பு முகாம்கள் நடைபெறாத மீதமுள்ள பகுதிகளிலும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பங்கள்-டோக்கன் வினியோகம்

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் நேற்று முன்தினம் முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2-வது நாளாக நேற்றும் விண்ணப்பங்கள், டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட வேண்டும்.

விடுபட்டவர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்

அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்ட சிறப்பு முகாம்களில் விடுப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும் இந்த 2 நாட்களில், விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு காரணங்களால் முகாமில் வந்து பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்