< Back
மாநில செய்திகள்
கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

தினத்தந்தி
|
25 July 2023 6:45 PM GMT

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை திட்டம்

2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தை சார்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் http://socialjustice.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்