< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரம்; புறவழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மாநில செய்திகள்

போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரம்; புறவழிச்சாலை பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
26 Sep 2022 11:16 AM GMT

போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் திருத்தணி நகரத்துக்கு தீர்வாக 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகள் எப்போது முடிக்கப்படும்? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புறவழிச்சாலை பணிகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தின் அடையாளமாக பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலில் முகூர்த்த நாட்களிலும், ஆடி கிருத்திகை, தைப்பூசம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் வெளிமாநில, மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் திரண்டு வருவர். இதனால் ஆயிரக்கணக்கான வாகனங்களால் நகரில் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நகரின் பிரதான பிரச்சினையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த 2008-ம் ஆண்டு ரூ.46 கோடி மதிப்பில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், புறவழிச் சாலை அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, 2013-ம் ஆண்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு, 'டெண்டர்' விடப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம், 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

இந்த புறவழிச்சாலை பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் போது, போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

கிடப்பில் இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள்

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலம், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட தூண்கள் அமைக்கும் பணிகளை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் டெண்டர் விடுப்பட்டு பணிகள் சில மாதங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து, ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரின் அனுமதியை ரத்து செய்து, ரெயில்வே உயர்மேம்பாலம் அமைக்க புதிய டெண்டர் விடுப்பட்டது. இதனையடுத்து மேம்பாலம் அமைக்க இரும்பு தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். பின்னர் இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டு கடந்த சில மாதங்களாகவே கிடப்பில் உள்ளது.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-

புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்து விட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. ரெயில்வே நிர்வாகம் இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்தால், மற்ற தூண்களை நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடித்து உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் பணி நடைபெறும். பின்னர், மக்கள் பயன்பாட்டிற்கு புறவழிச்சாலை விரைவில் கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழிச்சாலை பணிகள் 80 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில், எப்போது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்