< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்

சினிமா ஆசையில் வேறு ஒருவருடன் சென்னைக்கு சென்றதால் டிக்-டாக் பிரலமான திருப்பூரை சேர்ந்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி
|
7 Nov 2022 12:44 PM GMT

சினிமா ஆசையில் வேறு ஒருவருடன் சென்னைக்கு சென்றதால் டிக்-டாக் பிரலமான திருப்பூரை சேர்ந்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

வீரபாண்டி

சினிமா ஆசையில் வேறு ஒருவருடன் சென்னைக்கு சென்றதால் டிக்-டாக் பிரலமான திருப்பூரை சேர்ந்த பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிக்-டாக் பிரபலம்

திருப்பூர் செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 38). திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இவர் அந்த பகுதியில் உள்ள வேறு ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி திருப்பூரில் கணவருடன் வசித்து வருகிறார்.

சித்ராவுக்கு சமூக வலைத்தளங்கள் மீது தீராத மோகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டிக்-டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் அதிக ஆர்வமாக இருந்தார். தினம், தினம் புதுப்புது வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் இவரது வீடியோவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. ஒரு கட்டத்தில் இவரது புதிய வீடியோவுக்காக பலர் ஏங்கி தவித்ததாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் சித்ரா வீடியோ பதிவிடுவதை அமிர்தலிங்கம் விரும்பவில்லை. இதனால் மனைவியை பலமுறை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனாலும் கணவர் சொல்லை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை.

சினிமா வாய்ப்பு தேடி சென்னை பயணம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்-டாக் மூலம் சித்ராவுக்கு, ஆண் நண்பர் ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் சித்ராவை சினிமாவில் எப்படியும் நடிக்க வைத்து விடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சினிமாவில் நடிக்கும் கனவும், அந்த வாய்ப்பு தற்போது கைகூடி வந்து இருப்பதாகவும், இதனால் சென்னை செல்ல உள்ளதாகவும் கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு கணவரின் பேச்சைக்கேட்காமல் அவரது சொல்லை மீறி தனக்கு அறிமுகமான ஆண் நண்பருடன் சினிமாவில் நடிக்க சென்னைக்கு சென்றதாக தெரிகிறது.

சென்னைக்கு நடிக்க வாய்ப்பு தேடிச் சென்ற சித்ராவிற்கு வாய்ப்பு கிடைக்காததால் சில மாத காலம் சென்னையில் இருந்துவிட்டு மீண்டும் திருப்பூருக்கு வந்துள்ளார். பின்னர் கணவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தினார்.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் சித்ரா மீண்டும் சென்னைக்கு சினிமாவில் நடிக்க செல்வதாக தனது கணவரிடம் கூறினார். இதனால் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சித்ரா அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இதன் பின்னர் சித்ராவை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பேரில் சித்ரா மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிைலயில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு கழுத்தில் காயங்களுடன் சித்ரா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சித்ராவின் கணவர் அமிர்தலிங்கத்தை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மனைவி சினிமாவில் நடிக்கச் செல்வதில் விருப்பமில்லை என்பதால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரம் அடைந்து துப்பட்டாவால் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அமிர்தலிங்கத்தின் மீது மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

=============

பாக்ஸ்

தினமும் புதிய வீடியோ பதிவு

டிக்-டாக்கில் சித்ரா பிரபலமாக இருந்ததால் தினமும் புதிய புதிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீடியோவுக்கும் பலரின் லைக்குகள் குவிந்தன.


----

Related Tags :
மேலும் செய்திகள்