< Back
மாநில செய்திகள்
தியாகராஜர் ஆராதனை விழா - தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

தியாகராஜர் ஆராதனை விழா - தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
10 Jan 2023 10:54 PM GMT

தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜருக்கு ஆண்டுதோறும் 5 நாட்கள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.

தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா 11-ந்தேதி (இன்று) நடைபெறுகிறது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை 7.45 மணிக்கு தொடங்கி வைக்கிறார். பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

பின்னர், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும், இசைத்தும் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தவுள்ளனர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, காலை 10 மணிக்கு நாகசுரம், 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, முற்பகல் 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் உள்பட தொடர்ந்து இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனிடையே, இரவு 8 மணிக்கு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடைபெறவுள்ளது.

கவர்னர் வருகையையொட்டி தஞ்சை மற்றும் திருவையாறில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்