< Back
மாநில செய்திகள்
பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை - திருவள்ளூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
10 Jun 2023 7:56 AM GMT

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள் படி குப்பை கழிவுகளை உருவாக்குபவர்கள் அவற்றை அப்புறப்படுத்த கடமைப்பட்டவர் ஆவார்.

நகராட்சி பகுதியில் தினசரி 100 கிலோவிற்கு மேல் மொத்த கழிவுகளை உருவாக்கிடும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டு தளங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், மற்றும் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் கழிவுகளை தங்களுக்கு சொந்தமான இடத்தில் வைத்து உரமாக்கி கொள்ள வேண்டும். மறு சுழற்சிக்கான உலர் கழிவுகளை மறுசுழற்சியாளரிடமோ அல்லது நகராட்சி வசமோ ஒப்படைப்பு செய்ய வேண்டும்.

தங்கள் நிறுவனத்தில் இடமில்லாத பட்சத்தில் மற்ற நிறுவனங்களுடன் இணைத்து இயற்கை உரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்காணும் சட்டங்கள் மற்றும் விதிகளின்படி பொதுமக்களுக்கு சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கழிவுகளை பொது இடங்களிலோ, கால்வாய் ஓரங்களில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்த ஆலோசனைகளுக்கு திருவள்ளூர் நகராட்சி பொது சுகாதார பிரிவை அணுகலாம் அல்லது திருவள்ளூர் நகராட்சி https://tnurbantree.tn.gov.in/tiruvallur என்ற வலைதளத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்