< Back
மாநில செய்திகள்
இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை-சீமான் பேட்டி
மாநில செய்திகள்

இனி வரும் தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி இல்லை-சீமான் பேட்டி

தினத்தந்தி
|
20 Sep 2024 10:01 PM GMT

இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்திருந்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்சினையையும், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையையும் கிளப்புகின்றனர்.

நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுமா?. மேற்கு வங்கத்திலும், பீகாரிலும் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த முடியாது.

இனிவரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடாது. எங்களது எண்ணத்திற்கு விருப்பமுள்ள சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் 5 தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டிற்கு மதுரையும், தொழில் வளர்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்திற்கு சென்னையும், ஆன்மிகத்திற்கு கன்னியாகுமரியும், நிர்வாகத்திற்கு திருச்சியும் ஆகியவற்றை தலைநகராக வைக்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்