< Back
மாநில செய்திகள்
ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு

தினத்தந்தி
|
26 Jan 2023 1:29 PM GMT

ஓடும் பஸ்சில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.1 லட்சம் பணம் திருட்டு நடைபெற்றது.

செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 75). இவர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவருடைய மனைவி சங்கரம்மாள். கணவன்-மனைவி இருவரும் திருச்சியில் சங்கரம்மாளுக்கு கண் சிகிச்சை செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி வந்தனர்.

பின்னர் தங்கசாலை பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் செல்லும் மாநகர பஸ்சில்(தடம் எண் 57)வீட்டுக்கு சென்றனர். வியாசர்பாடி மார்க்கெட் அருகே சென்றபோது அவர் வைத்திருந்த பை திடீரென மாயமானது. அதில் ரூ.1 லட்சம், ஒரு பவுன் தங்க மோதிரம், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு உள்ளிட்ட சில ஆவணங்களை வைத்து இருந்தார்.

ஓடும் பஸ்சில் யாரோ மர்மநபர் அந்த பணம், நகை இருந்த பையை திருடிச்சென்று இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்