< Back
மாநில செய்திகள்
கட்சி கொடிக்கம்பம் திருட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கட்சி கொடிக்கம்பம் திருட்டு: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

தினத்தந்தி
|
19 Aug 2023 6:30 PM GMT

கட்சி கொடிக்கம்பத்தை மர்ம ஆசாமிகள் திருடியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளைெயாட்டி கந்தர்வகோட்டை அருகே உள்ள மாட்டாங்கால் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 17-ந் தேதி வாழ்த்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் அன்று இரவு மர்ம ஆசாமிகள் கட்சி கொடிக்கம்பம் மற்றும் பேனரை திருடி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் மீண்டும் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் புதிதாக அமைக்கப்பட்ட கட்சி கொடிக்கம்பத்தை திருடி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் சார்பில் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலை கைவிடாததால் புதுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி மற்றும் கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதாக உறுதியளித்தனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்