< Back
மாநில செய்திகள்
ஆயுதபூஜைக்கு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஆயுதபூஜைக்கு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
1 Oct 2022 7:54 PM GMT

வேடசந்தூர் அருகே ஆயுதபூஜைக்கு பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயுதபூஜை

ஆயுதபூஜை வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த ஆயுதபூஜைக்கு வழிபாட்டின்போது வாழைப்பழம், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட படையலுடன் பொரி முக்கிய பங்கு வகிக்கும். இந்த பொரி தயாரிப்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி, எரியோடு கிராமங்கள் பெயர் பெற்றதாகும்.

பொரி தயாரிக்கும் பணி

இங்கு தயாராகும் பொரி திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை நெருங்கி வருவதை முன்னிட்டு அழகாபுரி, எரியோடு கிராமங்களில் உள்ள ஆலைகளில் பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது.

இது குறித்து அழகாபுரி பொரி உற்பத்தியாளர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, கொல்கத்தா, மைசூரில் இருந்து நெல் வாங்கி வருகிறோம். அந்த நெல்லை அரைத்து அரிசியாக மாற்றுவோம். பின்னர் அந்த அரிசியை ஒரு வாரம் பக்குவப்படுத்தி, அதன்பிறகு எந்திரத்தில் கொட்டி பொரி வறுத்து எடுக்கப்படுகிறது.

உப்பு இல்லாத 100 லிட்டர் கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.480-க்கும், உப்புள்ள 100 லிட்டர் கொண்ட ெபாரி மூட்டை ஒன்று ரூ.420-க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரிசி விலை, மின் கட்டணம், விறகு மற்றும் தொழிலாளர்கள் கூலி பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் பொரிக்கு மட்டும் போதிய விலை இல்லை. இதனால் பொரி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்