< Back
மாநில செய்திகள்
லாரி மோதியதால் குழாயில் உடைப்பு... பல அடி உயரத்துக்கு நீரூற்றுபோல் வெளியேறிய தண்ணீர்
சென்னை
மாநில செய்திகள்

லாரி மோதியதால் குழாயில் உடைப்பு... பல அடி உயரத்துக்கு நீரூற்றுபோல் வெளியேறிய தண்ணீர்

தினத்தந்தி
|
24 Feb 2023 8:17 AM GMT

ரெட்டேரி அருகே லாரி மோதியதால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்துக்கு நீரூற்றுபோல் தண்ணீர் வெளியேறியது.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இங்கு சுத்திரிக்கப்படும் தண்ணீர் 2.5 மீட்டர் சுற்றளவு கொண்ட ராட்சத குழாய் மூலம் மாதவரம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை பகுதிகளுக்கும், ரெட்டேரி வழியாக அண்ணா நகர், கோயம்பேடு, வடபழனி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ரெட்டேரி அருகே செல்லும் இந்த ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து தண்ணீர் நீரூற்றுபோல சுமார் 25 அடி உயரத்துக்கு பீய்ச்சி அடித்து வெளியேறி சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. திரு.வி.க.நகர் மண்டல பொறுப்பு பகுதி பொறியாளர் சுரேஷ்குமார் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குடிநீர் குழாயில் உள்ள முக்கிய வால்வை அடைத்தனர். எனினும் ஏற்கனவே குழாய் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் முழுவதும் சாலையில் வீணாக வெளியேறியது.

ஒப்பந்ததாரர்கள் 3 குழுவை வரவழைத்து குழாயை சீரமைத்து இரவு 11 மணிக்கு வழக்கம் போல் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெட்டேரி பகுதியில் கால்வாய் நீர் வெளியேற பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையால் கான்கிரீட் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அதற்காக கான்கிரீட் ஏற்றி வந்த லாரி தவறுதலாக குடிநீர் குழாய் மீது மோதியதால் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது தெரிந்தது.

மேலும் செய்திகள்