< Back
மாநில செய்திகள்
குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
திருச்சி
மாநில செய்திகள்

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

தினத்தந்தி
|
26 Sep 2023 7:42 PM GMT

ரூ.37½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.37½ லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.37½ லட்சம் கொள்ளை

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார் (வயது 56). கடந்த 12-ந்தேதி பகல் 12 மணி அளவில், இவர், கடையில் வசூலான ரூ.37½ லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக ஒரு பையில் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணத்தை பையுடன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வக்கீல்களுக்கு தொடர்பு

மேலும் இந்த வழக்கில் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜாவின் மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர். நீதிமன்ற காவலில் இருந்த சூர்யாவை நேற்று முன்தினம் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.37½ லட்சத்தை ஒரு பெண் வக்கீல் உள்பட 3 வக்கீல்களிடம் கொள்ளையர்கள் கொடுத்ததாகவும், அந்த பணத்தை 3 வக்கீல்களும் கோர்ட்டு வளாக பகுதியில் வைத்து பங்கு போட்டதாகவும், அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

வியாபாரிகள் முற்றுகை

இதைத்தொடர்ந்து பெண் வக்கீல் உள்பட 3 வக்கீல்களையும் போலீசார் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு நேற்று அழைத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினார்கள். இதுபற்றி அறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் மளிகை, ஆயில், வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் நேற்று இரவு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் இன்றி கைது செய்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலை வரும்படி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இந்த கொள்ளை சம்பவத்தில் 3 வக்கீல்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், பணத்தை பங்கு போட்டது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்ததும் அதில் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்