பெரம்பலூர்
விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சாவு
|விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்ராசு. கொத்தனாரான இவர் கடந்த 2-ந்தேதி இரவு ஈரோடு மாவட்டம், காசிபாளையம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஆனந்த், அஜித் ஆகியோருடன் ஈரோட்டில் இருந்து பெரம்பலூருக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அஜித் ஓட்டினார். துறையூர்-பெரம்பலூர் சாலையில் அடைக்கம்பட்டியில் டி.களத்தூர் பிரிவு சாலை அருகே வந்தபோது, அஜித்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், அந்த வழியாக நடந்து சென்ற அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கோவிந்தராஜின் மகன் கார்த்திக் (32) என்பவர் மீது மோதியது. இந்த விபத்தில் சின்ராசு, கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனந்த், அஜித் ஆகியோர் லேசான காயமடைந்தனர். இதில் சின்ராசு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கார்த்திக் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடா்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.