< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் கேட்ட மகன்... பிறந்தநாளுக்கு வாங்கி தருவதாக கூறிய பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் கேட்ட மகன்... பிறந்தநாளுக்கு வாங்கி தருவதாக கூறிய பெற்றோர்... அடுத்து நடந்த விபரீதம்

தினத்தந்தி
|
22 May 2024 3:22 AM GMT

ஜெயபிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள புத்துக்கோவில் ரெயில்வே மேம்பால பகுதியில் சுமார் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி, போயர் காலனி பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. மேலும் இவரது குடும்பத்தினர் பல வருடங்களாக பெங்களூருவில் வசித்து வேலை செய்து வருகின்றனர். ஜெயபிரகாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார்சைக்கிள் (புல்லட்) வாங்கித்தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு, ''உன்னுடைய பிறந்தநாளுக்கு வாங்கித் தருகிறோம்'' என்று பெற்றோர் கூறியதாக தெரிகிறது. நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஜெயப்பிரகாஷ் வீட்டின் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் தண்டவாள பகுதியில் அந்தவழியாக வந்த ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள் வாங்கிக்கொடுக்காததால் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்