< Back
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

தினத்தந்தி
|
7 Jun 2022 12:37 PM GMT

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துக்கொண்டு மனுக்களை அளித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 244 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2018-ம் வருட படைவீரர்கள் கொடிநாள் நிதி ரூபாய் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை வசூல் புரிந்த அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 30 கிராம் எடை கொண்ட வெள்ளிப் பதக்கங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதேபோல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 154 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தேசிய அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்த நபரின் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, இன்றையதினமே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினையும், மேலும், 5 நபர்களுக்கு தலா ரூ.78,850 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், உதவி ஆணையர் (கலால்) இலட்சுமணன், துணை கலெக்டர் சமூக பாதுகாப்புத் திட்டம் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, மாற்றுதிறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்