< Back
மாநில செய்திகள்
மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு
மதுரை
மாநில செய்திகள்

மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு, கிடு உயர்வு

தினத்தந்தி
|
31 Dec 2022 8:00 PM GMT

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ.1800-க்கு விற்பனையானது.

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ.1800-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கே கொண்டுவரப்படும் பூக்கள், விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மல்லிகை பூ விலை உச்சத்தை தொடும்.

இதற்கிடையே, மதுரையில் பெய்து வரும் பனிப்பொழிவு காரணமாக மதுரை பகுதிகளில் இருந்து மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது.

மல்லிகைப்பூ ரூ.1800-க்கு விற்பனை

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்திருந்தது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை விற்பனையானது. இதுபோல், ஒரு கிலோ பிச்சி பூ ரூ.1,300, முல்லை ரூ.1,300, பட்டன்ரோஸ் ரூ.220, செண்டுமல்லி ரூ.100, அரளி ரூ.300 என இருந்தது. மற்ற பூக்களின் விலையும் சற்று அதிகமாக இருந்தது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், "மதுரை மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள கிராமங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே மொட்டுக்கள் கருகும் நிலை உருவாகி இருக்கிறது. மகசூல் குறைந்ததால் மதுரை மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்களின் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் 1 கிலோ மல்லிகைப்பூ, ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட நிலையில், தற்போது மல்லிகை பூக்கள் ரூ.1,800 வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில் அதாவது, பொங்கல் பண்டிகை முடியும் வரை பூக்களின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்