< Back
மாநில செய்திகள்
பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
நாமக்கல்
மாநில செய்திகள்

பூக்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

தினத்தந்தி
|
16 Feb 2023 6:45 PM GMT

நாமக்கல்லில் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து இருப்பதால் பூக்கள் விலை ‘கிடுகிடு' என உயர்ந்து உள்ளது.

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

ஆனால் சமீப காலமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைந்து உள்ளது. நாமக்கல் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.1,000-க்கும், முல்லை பூக்கள் கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.160-க்கும், அரளி ரூ.300-க்கும், ஜாதி மல்லி கிலோ ரூ.800-க்கும் விற்பனையானது. நாளை (சனிக்கிழமை) மகா சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதாலும், பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து சற்று குறைந்து இருப்பதாலும் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்