கரூர்
ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது
|கரூர் அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் கேரள தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் புகை
கேரள மாநிலம், இடுக்கியை சேர்ந்தவர் லைஜூ (வயது 32). இவரது மனைவி நிகிதா. லைஜூ பெங்களூருவில் ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லைஜூ தனது மனைவி நிகிதாவுடன் நேற்று முன்தினம் இரவு கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து பெங்களூருவிற்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த கார் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் ஆட்டையாம்பரப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது காரின் முன்பக்கத்தில் என்ஜின் பகுதியில் கரும்புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி காரை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தனர். அப்போது கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
தம்பதி உயிர் தப்பினர்
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து, காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. புகை வந்தபோது தம்பதி காரைவிட்டு உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.